ஆளரியாய் திருவவதரித்த நரசிங்கனுக்கு ஆச்ரிதர்கள் மேலுள்ள பக்ஷபாதம் தான் எத்துணை? அடியார்களை எப்படிக் காப்பது என்று சதா சர்வ காலமும் சிந்தனை செய்வதற்காகவேயன்றோ பெருமான் இப்பூவுலகில் பல க்ஷேத்ரங்களில் பர்யங்க பங்கத்தில் யோகாந்ருஸிம்ஹணாக வீற்றிருக்கிறான்!
குழந்தை ப்ரஹ்லாதனை அவன் தந்தை செய்யும் ஹிம்சைகளிலிருந்து காக்க வேண்டும். இரணியானால் சிறைவைக்கப்பட்ட ஞானிகளையும் மஹான்களையும் விடுவிக்கவேண்டும். தேவர்களையும் வேதத்தையும் அக்கொடூரனிடமிருந்து ரக்ஷிக்க வேண்டும். எம்பெருமானுக்கு பரமபதத்தில் இருப்பு கொள்ளவில்லை. இமையோர் தலைவன் ஒரு குழந்தை அழைத்தா வரப்போகிறான் என்ற இறுமாப்பு இரணியனுக்கு.
குழந்தை ப்ரஹ்லாதன் “நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”(திருவாய்மொழி 5-7-10) என்று ஸ்ரீமந் நாராயணனை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்துக்கொண்டு, தன் தந்தை தன்னிடத்தில் செய்த ஹிம்சைகளையெல்லாம் பொறுத்துக்கொண்டான். ஆனால் ஸர்வேஸ்வரன் தன் மீது செய்யும் தோஷங்களைக் கூடப் பொறுப்பான், தன் பக்தர்கள் மீது இழைக்கப்படும் தோஷங்களைக் க்ஷணக்காலமும் பொறுக்கமாட்டானன்றோ! “தனக்குரியனாய் அமைந்த தானவர்கோன் கெட்டான், உனக்குரியனாய மைந்தன் உய்ந்தான்” (நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி – 77) என்றபடி ஸ்ரீமந் நாராயணனே பரத்வம், நாம் எல்லோரும் அவனுடைய தாஸர்கள்(தாஸபூதா ஸ்வத ஸர்வே ஹயாத்மான: பரமாத்மந: – மந்த்ரராஜபத ஸ்தோத்ரம் 11) என்று உணர்ந்த ப்ரஹ்லாதன் ஈசன் அடங்கெழில் அஃதென்று அடங்குக(திருவாய்மொழி1-2-7) என்று அவனுள்ளே அடங்கிப் போனான். இதனை உணராத இரணியன் எம்பெருமான் திருக்கைகளாலேயே மாண்டே போனான்.
ஸ்வாமி தேசிகன் காமாஸிகாஷ்டகத்தில் மிக அழகாக ஸாதிக்கிறார்
த்வயி ரக்ஷதி ரக்ஷகை: கிமந்யை
த்வயி சாரக்ஷதி ரக்ஷகை: கிமந்யை:
காமாஸிகாஷ்டகம் – 8
ந்ருஸிம்ஹன் ஒருவனை ரக்ஷிக்கவேண்டும் என்று ஸங்கல்பம் செய்துவிட்டால் மற்ற தெய்வங்கள் காப்பால் என்ன பயன்? ந்ருஸிம்ஹன் ஒருவனை ரக்ஷிக்கவேண்டாம் என்று ஸங்கல்பம் செய்துவிட்டால் மற்ற தெய்வங்கள் காப்பால் என்ன பயன்?
Leave a comment